கடவுள் நம்பிக்கயா? மதநம்பிக்கயா?
நவம்பர் 08, 2021
கடவுள் நம்பிக்கை
ஒங்களுக்கு மத நம்பிக்கய விட, கடவுள் நம்பிக்க அதிகமா இருந்துச்சுன்னா நா சொல்றத ஏத்துக்கலன்னாலும் கொறஞ்சபட்சம் சிந்திக்கவாவது செய்வீங்க!
ஆனா கடவுள் நம்பிக்க விட மத நம்பிக்க அதிகமா இருந்துச்சுன்னா, உடனே ஒங்க மதத்துக்காக வரிஞ்சி கட்டிட்டு வருவீங்க!
கஷ்டம் தாங்க! பாரம்பரியமா இப்புடி நம்பிட்டு திடீர்னு கடவுள் மந்திரவாதி இல்லன்னா கோபம் பொத்துக்கிட்டு தா வரும்! நா மறுக்கல! ஒங்க கோபம் நியாயமானதுங்க!
ஆனா கண்ணு முன்னாலயே காலத்துக்கும் கையேந்தி நிக்குறங்க ஏழைங்கள பாக்கிறப்ப மனசு வலிக்குதே? அவங்கள காலத்துக்கும் கையேந்த வைக்க நினைக்கிறது நியாயமாங்க?
ஒரே பாதையில எல்லாரும் போயி தீர்வு கெடைக்கலன்னா வேற பாதையில போய் பாக்குறது தப்பில்லயே?
நாம சொல்றதெல்லாம் செஞ்சும் தீர்வு கெடைக்காம கஷ்டப்படுற மக்க கண்ணு முன்னால, இன்னமும் நம்மள நம்பி ஏக்கத்தோட நிக்குறத பாக்குறப்ப, அது ரொம்ப குத்த உணர்ச்சியால கொல்லுதே!
இப்பவும் நா சொல்றத நம்ப சொல்லல! கற்பனை பண்ணி பாக்க சொல்றேன்! இன்னமும் நா கடவுள் இல்லன்னு சொல்லலியே? இப்பவும் நா Miracle நடக்கலன்னு சொல்லலியே?
மேஜிக் எப்பவும் நடந்தது இல்ல. புதுமயும் நடக்க முடியாதுன்னு சொல்றது மட்டுந்தா என்னோட வாதம்.
ஒங்க பார்வய கொஞ்சம் மாத்திப் பாருங்கன்னு தான சொல்றேன்! நீங்க கண நேரம் கற்பன பண்ணுனா கூட என்னமோ ஒங்க கடவுள யாராவது கடத்திட்டுப் போயிருவாங்களோன்னு நினைக்க தேவயில்லன்னு தான சொல்றேன்.
ஒண்ண புரிஞ்சிக்கிடுங்க! இந்த உலகம் நம்மோடது கெடயாது. அது கடவுளோடது. நீங்க கடவுள காப்பாத்த வேண்டிய தேவயும் கிடையாது. கடவுள் இருந்தா அவருக்கு எப்படி தன்ன காப்பாத்திக்கனும்னு தெரியும்ங்க. அவர விடவாங்க ஒங்க அறிவு பெருசுன்னு நெனைக்கிறீங்க?
ஒலகத்தயே படைச்ச கடவுள நீங்க காப்பாத்தனும்னு துடிக்கிறது, வடிவேலு சொல்ற வசனம் மாதிரி சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு.
கடவுள் மேல ஒங்க கருத்தயெல்லாம் திணிச்சி, என்னமோ நீங்க தா கடவுளயே பாதுகாக்கிறது போலயும், ஒலகமே ஒங்களோட அறிவால தான் பாதுகாப்பா இருக்குங்கிறது போலவும் நீங்களா கற்பனை பண்ணிக்கிடாதீங்க.
ஒலகத்த படைச்சதுல இருந்து அவரு பாக்காத குள்ளநரிகளா? விஷ ஜந்துக்களா? கருணாகங்களா? கருந்தேள்களா?
நாம ஒண்ணும் நம்ம மதத்துல டாக்டர் பட்டம் வாங்குனவங்க கெடயாதுங்க. நம்ம அப்பா அம்மாவோட மதம் தான், நம்ம மதம். அவுங்க தா நம்மள, நாம இப்ப இருக்குற மதத்துல கோர்த்து வுட்டாங்க!
நம்ம அப்பா அம்மா சொல்லிக்கொடுக்குறது தா நம்மளோட மதமே! அந்த குடும்பத்துல பொறந்ததுனால தா இப்ப நாம இருக்குற மதத்துல இருக்கோம்.
வரலாத்துல நடந்த காலனியாதிக்கத்த இனிமே யாரும் மாத்தி எழுத முடியாது. நடந்தது நடந்தது தான். அது முடிஞ்சி போன கத. அத ஏத்துக்க மனசு இருந்தாலும், இல்லன்னாலும் நடந்தத மாத்தி எழுத முடியாது. அது இப்ப Recorded History. ஒருவேள, இதெல்லாம் நடக்காம இருந்திருந்தா எப்படி இருந்திருப்போம்?