உயிர்ப்பு கதைகள்

உயிர்ப்பு கதைகள்

உயிர்ப்பு கதைகள்

ஏப்ரல் 17, 2022

இறந்தவர் உயிர் பெற்று எழுவது சாத்தியமா? கடவுள் நினைத்தால் தன் வசதிக்கு ஏற்ப இயற்கை விதிகளை மாற்றி எழுத முடியுமா? இறந்து போனவர்கள் மீண்டும் தோன்றி காட்சி தர முடியுமா? அந்த காட்சிகளை மனித கண்களால் பார்க்க முடியுமா? ஆவிகளின் உலகம் உண்மையா?

கடவுள் நம்பிக்கை

நம்பிக்கை, உயிர்ப்பு, போதனை, மத வெறி

கடவுளால் எப்போதுமே யாருக்காகவும் இயற்கை விதிகளை மாற்றி எழுத முடியாது. மாற்றி எழுதி மேஜிக் செய்கிறவர் கடவுளாயும் இருக்க முடியாது. உயிர்ப்பு நம்பிக்கை தனி மனித நம்பிக்கையாக இருப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால் அதனை குழு நம்பிக்கையாக திணித்து பல கடவுள்களை நம்பும் இந்தியா என்கிற ஆன்மீக மண்ணில் எங்கள் கடவுள் தான் மெய்யான கடவுள் என்று எளியவர் மனதில் விஷமேற்றுவது அறமல்லவே? அது உண்மையான கடவுளின் குரலாக இருக்க முடியாதே? எனவே உயிர்ப்பும் கட்டுக்கதையே.

கன்னி மரியாள் கன்னியாக இயேசுவைப் பெற்றெடுத்தது மத நம்பிக்கை என்றால், குந்தி தேவி சூரிய கடவுளை மனதில் பூஜித்து கர்ணனை பெற்றெடுத்ததை மட்டும் மூட நம்பிக்கையாக இழிவு படுத்துவது என்ன ஒரு இழிவான மனநிலை? இது மத வெறி இல்லையா? இது அடுத்தவரின் மனதை புண்படுத்துகிற இழிசெயல் இல்லையா? அது என்ன வரலாற்று மதம், மெய்யான கடவுள் என்கிற புளுகு மூட்டை மத அரசியல்?

கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை, கடவுளால் எல்லாம் இயலும் என்றால் இப்போது நடக்கிற அநியாங்களை ஏன் வேடிக்கை பார்க்கிறார்? அப்படியானால் அவர் இயலாமையின் கடவுள் தானே? ஏழைகளின் கண்ணீரைக் கண்டு ரசிக்கிற, அக்கிரமங்களை வேடிக்கை பார்க்கிற கடவுள் வெறும் சேடிஸ்ட் கடவுளே என்கிற பகுத்தறிவின் கேள்வி நியாயமானது தானே?

கண்டு விசுவசிப்பவரை விட காணாமல் விசுவசிப்பவர் பேறுபெற்றவர் என்று சொல்கிறார்கள். சரி, இது அந்த சீசர்களுக்கு பொருந்தாதா? இயேசு முதலாவதாக மரிய மகதலாவுக்கு தோன்றினார் என்று இவர்களின் புனித நூல் கூறுகிறது. அதனை அவர் அவருடைய சீசர்களுக்கு அறிவிக்கிறார். அவர்கள் நம்பினார்களா? இல்லையே.

அடுத்து வேறு இரண்டு சீசர்களுக்கு இயேசு தோன்றினாராம். அவர்களும் அந்த 11 சிஷ்ய கோடிகளுக்கு அறிவிக்கிறார்கள். அப்போதாவது நம்பினார்களா? இல்லையே. மூன்றாவதாக அவரே நேரடியாக தோன்றிய பிறகு நம்புகிறார்களாம். அவரோடு இருந்தவர்களே பார்த்த பிறகு தான் நம்புவார்களாம். ஆனால் 2000 வருடங்கள் பின்னால் இருக்கிற மற்றவர்கள் மட்டும், பார்க்காமலேயே நம்பி விட வேண்டுமாம். வேடிக்கை.

இந்த நம்பாத 11 புனித வகையறாக்கள் யார் தெரியுமா? தங்கள் குரு செய்த அத்தனை மாயா ஜாலங்களையும் (எண்ணினால் புத்தகமே கொள்ளாத அளவுக்கு நடந்த) கண்ணால் பார்த்தவர்கள், அவருடைய போதனை அத்தனையையும் உடனிருந்து கேட்டவர்கள். பாமரர் புரிந்து கொள்ள முடியாத மறைபொருளை தனியாக இருந்த போது குருவிடம் கேட்டு தெரிந்து கொண்ட வாய்ப்பு பெற்றவர்கள்.

தங்கள் தலைவர் உருமாறிய போது மோசே, எலியா என்று அத்தனை பெரிய தலைகளையும் பார்த்தவர்கள். தங்கள் குரு சாகப் போகிறார் என்பதை ஏற்கெனவே அறிந்தவர்கள், எச்சரித்தும் மறுதலித்தவர்கள், உயிர் பயத்தில் தலைவரை விட்டு ஓடிப் போனவர்கள், செத்தாலும் உயிரோடு வரப் போகிறார் என்பதை மூன்று முறை தங்கள் குருவே சொல்லிக் கேட்டவர்கள்.

இவ்வளவு தெரிந்திருந்தும், பார்த்திருந்தும், கேட்டிருந்தும், தங்கள் குருவின் உயிர்ப்பை நம்பாத இவர்கள் புண்ணியவான்கள். அது பெரிய தவறு இல்லையாம். ஆனால் இந்த பாமர மக்கள் இவர்கள் எழுதி வைத்ததை வாசித்த உடனே நம்பி விட வேண்டுமாம். நம்பினால் தான் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்குமாம், பணம் கிடைக்குமாம், வேலை கிடைக்குமாம். கிடைக்கவில்லை என்றால் நம்பிக்கை இல்லையாம். இது என்ன அகங்கார செருக்கு நிறைந்த போதனை? மூடத்தனமான நம்பிக்கை? அதிகாரத் திமிர் கொண்ட பேச்சு?

இந்த திரைக்கதைக்கு முதற் புள்ளி வைத்தவர் பவுல் என்கிற மனிதர். சொல்லப் போனால் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நற்செய்தியாளர்கள் கி.பி. 70 க்கு பிறகே எழுத தொடங்குகிறார்கள். ஆனால் இந்த பவுல் என்கிற மனிதர் தான் கி.பி 50 ம் ஆண்டில் தான் உருவாக்கிய திருச்சபைக்கு கடிதம் எழுதுகிறார். இயேசுவின் உயிர்ப்பு பற்றிய முதல் கதையை ஒப்பிக்கிறார். இவ்வளவுக்கும் இவர் இயேசுவை நேரில் பார்த்தவர் கிடையாது. இயேசு யார்? என்பதே இவருக்கு தெரியாது. இவர் உயிர்ப்பு உண்டு என்கிற பரிசேய நம்பிக்கை கொண்டவர். அவ்வளவு தான்.

கிறிஸ்தவர்களை துன்புறுத்துகிறார். அந்த பணியில் இருக்கிற போது தான் இயேசு தனக்கு தோன்றினார் என்று கதை சொல்கிறார். இந்த காட்சி எந்த அளவுக்கு உண்மை? தெரியாது. இத்தனை கொலைகள் செய்த பிறகு குற்ற உணர்வு எழுவது இயற்கை தானே? உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இந்த Hallucination வருவது இயல்பு தானே? ஒன்று மட்டும் புரியவில்லை.

இப்படி பாவிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் மட்டுமே தோன்றுகிற இந்த உயிர்ப்பு கடவுள் ஒரே ஒருமுறை அவரை நம்புகிற பக்த கோடிகளுக்கு தோன்றினால் அனைவரும் நம்பி விடுவார்களே? ஏன் தோன்ற மறுக்கிறார்? கண்ணா மூச்சி ஆட்டம் ஏன்? கடவுளைக் காண பாவம் செய்ய வேண்டுமா?

இயேசு தனக்கு தோன்றினார் என்று ஊரெல்லாம் சொன்ன இவர் தான், முதல் நூற்றாண்டிலேயே உலகம் முடிந்து இயேசு மீண்டும் எல்லாருக்கும் தோன்றுவார் என்றும் ஆரூடம் சொன்னார். இரண்டாயிரம் ஆண்டுகள் முடிந்து விட்டது. இன்னமும் ஆரூடம் பலிக்கவில்லை. இது ஒன்றே அவர் பார்த்ததாக சொல்வது உளவியல் சிக்கல் என்பதற்கான சான்றாக அமைய வில்லையா?

நம்புவது தனி மனித நம்பிக்கை. ஆனால் நம்பவில்லை என்றால் கடவுள் தண்டித்து விடுவார் என்று கண்டன தீர்ப்பு சொல்ல இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது? இவர்கள் திருந்துகிற வரை பொறுத்திருக்கிற கடவுள் மற்றவர்கள் திருந்த பொறுமையாக இருக்க மாட்டாரா? இவர்கள் செய்த அத்தனை கொலைகளையும், பழிபாவங்களையும் ஒரே நொடியில் மன்னித்த கடவுள் அடுத்தவன் பசிக்காக, பட்டினிக்காக செய்த தவறுகளை மன்னிக்க மாட்டாரா?

உண்பதற்கு மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கிற ஒருவன் பசியால் திருடியவனுக்கு, வறுமையினால் விபச்சாரம் செய்த பெண்ணுக்கு தீர்ப்பு எழுத என்ன யோக்கியதை இருக்கிறது? இவர்கள் திருந்திய உடனே ஒட்டுமொத்த உலகமும் அடுத்த நொடியில் திருந்தி விட வேண்டுமாம். இல்லை என்றால் கடவுள் தண்டித்து விடுவாராம். கடவுளையே கொலைகாரராக மாற்றும் கொடுமையான இந்த போதனையை போதிக்க எவ்வளவு கல் நெஞ்சம் வேண்டும்?

மத நிறுவனத்தை உருவாக்குவதின் பிண்ணனி முழுக்க முழுக்க அரசியலே. அந்த மத நிறுவனமே அரசியல் வாதிகள் செய்கிற அத்தனை தகிடு தத்தங்களையும் மறைக்கவும், பாமர மக்களை ஏமாற்றவும் துணை போகின்றன. உயிர்ப்பை மத நிறுவன நம்பிக்கையாக போதிக்கிற இந்த போதனையாளர் எவருக்கும் கடுகளவு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்கு தங்களுக்குள் போடுகிற சாதிச் சண்டை, பதவி சண்டை, பணத்தாசையே சாட்சி. கடவுளே நாங்கள் தான்டா என்கிற அறிவுச் செருக்கு சாட்சி.

இவர்கள் எவ்வளவு பெரிய மதவெறி பிடித்த மகான்கள் என்பதற்கு திராவிட திருடர்களுக்கும், ஊழலில் புளுத்துப் போயிருக்கும் காங்கிரசுக்கும் தோ்தல் நேரத்தில் கொடுக்கும் ஆதரவு முடிவுகள் அத்தாட்சி. தங்கள் சாதியில் தங்களுக்கு தலைவர் வேண்டும் என்று கேட்டு போராடுகிற இட ஒதுக்கீட்டு போராட்டம், அதனை ரசிக்கிற மேல் வர்க்கம். இதுவே இவர்கள் எள்ளளவும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்பதற்கும், மதத்தின் பெயரால் கடவுளை காவு கொடுக்கிற மிருக குணம் படைத்தவர்கள் என்பதற்கும் சான்றுகள்.

தன் சகோதரன் மனைவியை வைத்திருந்தது தவறு என்பதைச் சுட்டிக் காட்டியதற்கு திருமுழுக்கு யோவான் தன் தலையை காவு கொடுத்தார். முறையாக மனைவி இருக்கிறபோது முறையற்ற காரணத்திற்காக மனைவியை விவாகரத்து செய்வது தவறு என்று இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றி ஆங்கிலிக்கன் திருச்சபையை தொடங்கி தன் நாட்டு மக்களை சட்டம் போட்டு கத்தோலிக்க மதத்தில் இருந்து கட்டாயப்படுத்தி மாற்றினாலும் அவரை வெளியேற்றி நீதியை நிலைநாட்டிய போப் ஏழாம் கிளமெண்ட்.

இவர்கள் வாழ்ந்த வழியில் வரும் தமிழக மத நிறுவன தலைவர்களோ பதவி, பணம், சுயநலத்திற்காக மனைவி, இணைவி, துணைவி வைத்திருந்தவரோடு வெட்கமேயில்லாமல் சிரித்த முகத்தோடு புன்னகை முறுவலோடு கைகோர்த்து விழா எடுக்கிறார்கள். இந்த பக்த கோடிகளும் இவர்களை நம்பி தோ்தலில் மத வெறிக்கு எதிராக என்கிற பெயரில் வாக்கு கொடுக்கிறார்கள். உண்மையில் யாருக்கு மத வெறி?